திருப்பூரில் மளிகை கடையில் 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருப்பூர் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #PlasticBan
திருப்பூரில் மளிகை கடையில் 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Published on

திருப்பூர்:

தமிழகம் முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மீது அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் பொருட்களை யாராவது பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார்களா? என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவ்வப்போது பாலித்தீன் மொத்த விற்பனை கடைகளுக்கு சென்று சோதனையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை பகுதிகளில் உள்ள சில கடைகளில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிகஅளவு விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின்படி அங்கு விரைந்து சென்ற அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் அங்குள்ள ஒரு மளிகை கடையில் திடீரென சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்படி சுமார் 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இது போல பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PlasticBan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com