தோசைக்கல்லில் சப்பாத்தியை போட்டதும் எவர் சில்வர் கிண்ணத்தில் சுடுநீரை ஊற்றி சப்பாத்தி மீது வைத்து மெதுவாக அழுத்தினால் சப்பாத்தி பொன் நிறமாக மாறும். சீக்கிரமே வெந்தும் விடும்.
சில்வர் கிண்ணத்தின் அடிப்புறம் தட்டையாகவும் சாப்பாத்தி அளவுக்கு வட்ட வடிவமாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
கல் உப்பை பாட்டிலில் போட்டு நீர் ஊற்றி கலக்கி, அந்த தண்ணீரை வடித்து விட்டால் உப்பு சுத்தமாகி விடும். மணல் போன்ற தூசிகள் அடியில் தேங்கி விடும். மீண்டும் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்தால் மேலே தென்படும் தெளிந்த நீரை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
சமையல் அறையில் ஒரு நோட்டும், பேனாவும் வைத்துக் கொண்டால் மளிகைப் பொருட்கள் முடியும் தருவாயில் அவற்றை குறித்து வைத்துக்கொள்ளலாம். பின்பு கடையில் பொருள் வாங்கும் போது யோசித்து குழம்ப வேண்டாம்.
இடுக்கிகள் இல்லாத போது, அடுப்புத் துணிக்கு நூல் துணியைப் பயன்படுத்த வேண்டும். நைலான் துணிகளில் தீப்பற்றினால் அணைப்பதுசிரமம்.
பால் பொங்கினால் டம்ளரில் சிறிது தண்ணீரை எடுத்து ஊற்றினால் பொங்குவது அடங்கி விடும்.
மின் அடுப்பை பயன்படுத்தும்போது அடுப்பை அணைக்காமல் மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது. அடுப்பை அணைத்த பின் மின் இணைப்பை துண்டிக்கும் வழக்கத்தை பின்பற்றினால் அடுப்பு நீடித்து உழைக்கும்.
ரசம் கொதித்து விட்டதா என்று அடிக்கடி திறந்து பார்க்கத் தேவை இல்லை. ரசம் கொதித்து விட்டால், மூடி, கை தாங்க முடியாத அளவுக்கு சூடாகியிருக்கும். இதைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம்.