பழவகைகளில் சீதாப்பழத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. சீதாப்பழத்திற்கு ஆங்கிலத்தில் ‘கஸ்டர்ட் ஆப்பிள்’ என்று பெயர். சீதாப்பழம் இனிப்புச் சுவை கொண்டது.
இதில் புரதம், நார்ப்பொருள், மாவுப் பொருள், கொழுப்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், குளோரின், தயாமின், ரைபோஃபிளோவின், நியாசின், வைட்டமின் ‘சி’, ஆக்சாலிக் அமிலம், சக்தி உள்ளது.
மருத்துவப் பயன்கள்
சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராது காக்கும் என அமெரிக்காவில் மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆரம்ப நிலை காசநோயைக் குணப்படுத்தும் சக்தி சீதாப்பழத்திற்கு உண்டு. மத்திமநிலை காச நோய் உள்ளவர்கள், இப்பழத்தைத் தின்று வர, நோய் கட்டுக்குள் இருக்கச் செய்யும்.
தொடர் வாந்தி, குமட்டல் ஏற்பட்டால், ஒரு சீதாப்பழத்தை மென்று தின்றால், உடனே வாந்தி, குமட்டல் நிற்கும். அறுவை சிகிச்சைக்குப் பின், சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள இரணங்கள் விரைவில் ஆறும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் மாய்ந்து விடும். சிறிது வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து, சீதாப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர, குடற்புண் விரைவில் குணமாகும்.
சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள், சீதாப்பழச் சாறுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகினால், சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கடுப்பும் நீங்கும்.
உஷ்ணத்தால் ஏற்படும் மாந்தத்தைக் குணப்படுத்தும் தன்மை இப்பழத்திற்கு உண்டு.
நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உண்டு என ஜெர்மன் நாட்டு மருத்துவ ஆராய்ச்சியிலிருந்து தெரிய வருகிறது. இப்பழத்தில் குளுக்கோஸ் கணிசமாக உள்ளதால் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.