சாதம் மீந்து விட்டால் புளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி இரவில் வைத்து விட்டு மறுநாள் அந்த சாதத்தை வெங்காயம், பச்சை மிளகாயுடன் தாளித்து சூடாக கிளறி இறக்கினால் ருசி அபாரம்.
இட்லி தோசைக்கு சட்னி அரைக்கும் போது ஊறவைத்து முளை கட்டிய பச்சைப்பயறு சேர்த்து அரைத்தால் சுவையுடன் சத்தும் கிடைக்கும்.
இட்லி மாவுடன் கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் கலந்து இட்லி தட்டில் வேக வைத்தால் சத்தான வெஜிடபுள் இட்லி தயார்.
இட்லி மீதமாகிவிட்டால் நன்கு உதிர்த்து ஐந்து நிமிடங்கள் ஆவியில் வேக விட்டு தேங்காய்த் துருவலும், சர்க்கரையும், பொடித்த ஏலக்காயும் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்.
தேங்காய் துவையல் அரைக்கும் போது சிறிது இஞ்சி சேர்த்து அரைத்தால் துவையல் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது மிக்சியில் அரைப்பதாக இருந்தால் கொதி நீரில் ஊறவைத்து அரைத்தால் மாவு சீக்கிரம் அரைந்து விடும்.