குழந்தைகளின் பிடிவாதம்: பெற்றோர் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை!
குழந்தைகளை பாராட்டுவதில்லை
குழந்தைகள் ஆர்வமாக செய்யும் விஷயங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அவை மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தாலோ, பாராட்டும்படியாக இருந்தாலோ மனதார வாழ்த்த வேண்டும். அப்படி புகழ்ந்து பேசுவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
அப்படி அல்லாமல் குழந்தைகள் எது செய்தாலும் 'இதெல்லாம் ஒரு விஷயமா?' என்று பெற்றோர் சாதாரணமாக கடந்து செல்வது ஏற்புடையதாக இருக்காது. அது பிடிவாத குணத்தை அவர்களுக்குள் விதைப்பதற்கு அடித்தளமாக மாற வாய்ப்பிருக்கிறது.
மற்றவர்கள் முன்பு விமர்சனம் செய்தல்
பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்தால் அதனை சுட்டிக்காட்டி திருத்துவது பெற்றோரின் கடமை. அதேவேளையில் அந்த தவறை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதோ, அவர்கள் முன்பு திட்டுவதோ பிள்ளைகளுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.
சிறு வயதிலேயே அவர்கள் செய்யும் தவறுகளை மென்மையான அணுகுமுறையுடன் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்வதற்கு வழிகாட்டினால் எதையும் சுமூகமாக எதிர்கொள்ளும் பக்குவம் கொண்ட பிள்ளைகளாக வளர்வார்கள். அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் அது நலம் சேர்க்கும்.
தக்க சமயத்தில் அறிவுரை வழங்காமல் இருத்தல்
எந்தவொரு காரியத்தை குழந்தைகள் செய்வதாக இருந்தாலும் அவர்களுக்கு தக்க அறிவுரை கூற வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. அந்த அறிவுரை அவர்கள் தொடங்கும் காரியத்தை சிறப்பாக முடிப்பதற்கு வழிகாட்ட வேண்டும்.
திட்டமிடுதல், இலக்கு நிர்ணயித்தல், எதிர்கொள்ளும் இடையூறுகளை சமாளித்தல் என எல்லா நிலையிலும் பிள்ளைகளுக்கு பின்புலமாக இருந்து செயல்பட வேண்டும்.
அடிக்கடி தொந்தரவு செய்தல்
பெற்றோர் ஒரு வேலையை பிள்ளைகளிடம் ஒப்படைத்தால் அதனை அவர்கள் நிறைவேற்றி கொடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும். அந்த வேலை பற்றிய செயல்பாடுகளில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்களா? தொடர்ந்து ஆர்வமாக வேலையை தொடர்கிறார்களா? என்று கண்காணிக்கலாம்.
ஆனால் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை மீது குறை சொல்லிக்கொண்டே இருப்பது, அடிக்கடி திருத்தம் சொல்லிக்கொண்டே இருப்பது, பெற்றோர் சொல்லும் வேலையை பிடிவாதமாக மறுக்கும் மன நிலைக்கு ஆளாகக்கூடும்.
நன்றி சொல்லாமல் இருத்தல்
பிறர் நமக்கு செய்யும் உதவிகளுக்கு உடனடியாக நன்றி தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்து கொடுக்கும் வேலைக்கு நன்றி சொல்வதற்கு பெற்றோர் முன்வர வேண்டும்.
செய்யும் வேலை, உதவியின் தன்மைக்கேற்ப நன்றி சொல்ல முன் வர வேண்டும். இந்த பழக்கத்தை குழந்தைகள் சிறு வயதிலேயே கற்றுக்கொள்வதற்கு பெற்றோரே 'ரோல் மாடலாக' இருக்க வேண்டும்.
ஒழுக்கத்தை கடைப்பிடித்தல்
பெற்றோரின் நடத்தைகள் எப்படி இருக்குமோ அதனை பின்பற்றித்தான் பிள்ளைகள் வளர்வார்கள். அதனால் ஒழுக்கம் விஷயத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்.
ஒழுக்கம் வாழ்வின் உயர்வுக்கு இன்றியமையாதது என்பதை சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.