AI முழுவதையும் கேட்ட அமெரிக்க ராணுவம்.. முடியாது என மறுத்த Anthropic - ஆத்திரத்தில் டிரம்ப் அதிரடி தடை

நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்தை ராணுவ பயன்பாட்டுக்கு முழுமையாக அனுமதிக்க வேண்டும் என அரசு கோரியது. தார்மீக ரீதியாக சரியல்ல என்று ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி மறுத்துவிட்டார்.
AI முழுவதையும் கேட்ட அமெரிக்க ராணுவம்.. முடியாது என மறுத்த Anthropic - ஆத்திரத்தில் டிரம்ப் அதிரடி தடை
Published on

அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு துறையில் கோலோச்சும் ஓபன் ஏஐ (சாட்ஜிபிடி), கூகுள் (ஜெமினி), எக்ஸ் (குரோக்) ஆகியவற்றுக்கு மத்தியில் ஆந்த்ரோபிக் (Claude ஏஐ) குறிப்பிடத்தகுந்த போட்டியாளராக உருவெடுத்துள்ளது.

முன்பு ஓபன் ஏஐ நிறுவனத்தில் துணைத் தலைவர்களாக பணியாற்றிய டேரியோ அமோடி மற்றும் அவரது சகோதரி டேனியலா அமோடி ஆகியோர் 2021ல் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி ஆந்த்ரோபிக் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.

ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் ஏஐ பாதுகாப்பை விட வணிக லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று குற்றம் சாட்டியே அவர்கள் வெளியேறினர்.

தற்போது ஓபன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

இதற்கிடையே டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை(பென்டகன்) உள்ளிட்ட முக்கிய துறைகள் ஆந்த்ரோபிக் உடைய Claude ஏஐ சேவையை பயன்படுத்தி வந்தது.

அண்மையில், அந்திரோபிக் நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்தை ராணுவ பயன்பாட்டுக்கு முழுமையாக அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் கோரினார்.

ஆனால் அந்திரோபிக் நிறுவனம் இதற்கு வெளிப்படையாகவும், முழுமையாகவும் மறுத்துவிட்டது.

மனிதத் தலையீடு இல்லாத ஆயுதங்கள் மற்றும் மக்கள் மீதான கண்காணிப்பு போன்றவற்றுக்குத் தங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தார்மீக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சரியல்ல என்று ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி மறுத்துவிட்டார்.

எனவே பென்டகன் உடனான அந்திரோபிக் ஒப்பந்தம் ரத்தாகி உள்ளது.

மேலும் அந்திரோபிக் உடைய பிடிவாதம் டிரம்ப் உடைய கோபத்தையும் சம்பாதித்துள்ளது.

அனைத்து கூட்டாட்சி முகமைகளும் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட டிரம்ப், "ஆந்த்ரோபிக் தொழில்நுட்பம் எங்களுக்குத் தேவையில்லை, அதை நாங்கள் விரும்பவில்லை. இனி அந்த நிறுவனத்துடன் எந்த வணிகமும் செய்யப் போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

ராணுவம் எப்படிப் போராட வேண்டும் என்று ஒரு தனியார் நிறுவனம் கட்டளையிடுவதைச் சகித்துக்கொள்ள முடியாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் பாதுகாப்புத் துறை போன்ற அமைப்புகள், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அதனை முழுமையாக நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத், ஆந்த்ரோபிக் நிறுவனத்தை 'தேசிய பாதுகாப்பு விநியோகச் சங்கிலிக்கு அச்சுறுத்தல்' (Supply chain risk) என்று அறிவித்துள்ளார்.

அந்த நிறுவனத்தின் முடிவு, அதன் அகங்காரத்தையும் துரோகத்தையும் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

இந்தத் தடையின் காரணமாக, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் போட்டியாளர்களான,  ஓபன் ஏஐ பென்டகன் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் தருவாயில் உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com