டிரம்ப் அதிபரான சில மணி நேரத்தில்.. தலைவர் பதவியை தூக்கி எறிந்த விவேக் ராமசாமி - ஏன் தெரியுமா?

அரசின் செயல்திறனை மேம்படுத்தும் முகமை DODGE.DODGE இணை தலைவராக தொடர முடியாததால் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்
டிரம்ப் அதிபரான சில மணி நேரத்தில்.. தலைவர் பதவியை தூக்கி எறிந்த விவேக் ராமசாமி - ஏன் தெரியுமா?
Published on

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் திங்கள் கிழமை (இந்திய நேரப்படி நேற்றிரவு) பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஒன் அரங்கில் நடைபெற்றது.

இந்நிலையில் டிரம்ப் பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே அவர் உருவாக்கிய DODGE துறையின் இணை தலைவராக நியமிக்கப்பட்ட விவேக் ராமசாமி (39 வயது) பதவி விலகியுள்ளார்.

அரசின் செயல்திறனை மேம்படுத்தும் முகமை DODGE. புதிதாக உருவான இந்த துறையின் தலைவர்களாக உலக பணக்காரருக்கு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசுவாமி நியமிக்கப்பட்டனர்.

இருவரும் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டனர். முதலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட முனைந்த ராமசாமி, பின்னர் அந்த போட்டியில் இருந்து விலகி டிரம்ப் ஆதரவாளர்களில் ஒருவராக மாறினார்.

இவர்களின் ஆதரவை அங்கீகரிக்கும் விதமாகவே டிரம்ப் DODGE துறையை உருவாக்கி இவர்களை தலைவர்களாக்கினார். ஆனால் தற்போது விவேக் ராமசாமி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராமசாமி, DOGE ஐ உருவாக்க உதவும் வாய்ப்பு, எனக்கு கிடைத்த மரியாதை. அரசாங்கத்தை சீரமைப்பதில் எலான் மஸ்க் & குழு வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன்.

ஓஹியோவில் எனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி நான் மிக விரைவில் கூறுவேன். மிக முக்கியமாக, அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற அதிபர் டிரம்பிற்கு உதவ நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்! என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு விவேக் ராமசாமி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் DODGE இணை தலைவராக தொடர முடியாததால் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு கவர்னர் தேர்தல் நடைபெறுகிறது.

அவுட்பேக் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் ராமசாமி, "ஓஹியோவில் உள்ள மக்கள் என்னை கவர்னர் பதவிக்கு போட்டியிட அதிகளவில் வற்புறுத்துகின்றனர். அதை நான் ஏன் கருத்தில் கொள்ளக்கூடாது?" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com