தனிமையில் அடைத்து சித்ரவதை.. என்னை கொல்ல ராணுவம் முயற்சிக்கிறது..!- இம்ரான்கான் பரபரப்பு அறிக்கை

இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.
தனிமையில் அடைத்து சித்ரவதை.. என்னை கொல்ல ராணுவம் முயற்சிக்கிறது..!- இம்ரான்கான் பரபரப்பு அறிக்கை
Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.

இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறைக்கு சென்று இம்ரான்கானை சந்தித்தார். பின்னர் வெளியே வந்த உஸ்மா கூறும்போது,"இம்ரான்கான் நலமுடன் உள்ளார். ஆனால் அவருக்கு மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது" என்றார்.

இந்தநிலையில் தனது சகோதரியை சந்தித்த பிறகு இம்ரான்கான் அளித்த அறிக்கையை அவரது கட்சி வெளியிட்டது.

அதில் கூறியிருப்பதாவது:-

எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அவர்களுக்கு தற்போது என்னைக் கொலை செய்வதுதான் பாக்கி இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியைப் போன்ற சூழ்நிலையில் நான் அடைக்கப்பட்டுள்ளேன். எனக்கு ஏதாவது நடந்தால், ராணுவத் தலைவரும், உளவுப்பிரிவு டி.ஜி.யும் பொறுப்பாவார்கள்.

நான் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டேன். 5 நாட்கள் என் அறைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 10 நாட்கள் நான் அறையில் அடைக்கப்பட்டேன். இங்குள்ள நிலைமைகள் மனிதாபிமான மற்றவைகளாக உள்ளன.

ராணுவ தளபதி அசிம் முனீர் வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி. மனநிலை சரியில்லாதவர். எனக்கு அளிக்கப்படும் சித்ரவதைக்கு அசிம் முனீர் தான் காரணம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும், மின்சாரம் அல்லது சூரிய ஒளி, உணவு, சுத்தமான குடிநீர், மருத்துவ உதவி மற்றும் கைதிகளுக்கு பொதுவாகக் கிடைக்கும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இம்ரான் கான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று அவரது கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com