பலுசிஸ்தானில் ராணுவ வீரர்கள் உடல் ரீதியாக பலவீனமாக உள்ளனர்- பாகிஸ்தான் அமைச்சர்

பலுசிஸ்தானில் 12 இடங்களில் தாக்குதல் நடத்தி உள்ளனர்.குற்றக் கும்பல்கள் பலூச் விடுதலை ராணுவம் அமைப்பின் பெயரில் செயல்படுகின்றன.
பலுசிஸ்தானில் ராணுவ வீரர்கள் உடல் ரீதியாக பலவீனமாக உள்ளனர்- பாகிஸ்தான் அமைச்சர்
Published on

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் தனி நாடு கோரி அரசுக்கு எதிராக பலூச் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே பலுசிஸ்தான் மாகாணம் முழுவதும் ராணுவம், போலீஸ் ஆகியோரை குறிவைத்து ஒரே நேரத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பெண்கள் அடங்கிய தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல்களில் 280 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அமைப்பு தெரிவித்தது. மேலும் நுஷ்கி மாவட்டத்தில் முக்கிய நிலைகளைக் கைப்பற்றியதாகவும் தெரிவித்தனர். ஆனால் பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடித்ததாகவும், 177 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

இந்தநிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா ஆசிப் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது கூறியதாவது:-

பலுசிஸ்தானில் 12 இடங்களில் தாக்குதல் நடத்தி உள்ளனர். மாகாணம் முழுவதும் நடத்தப்பட்ட விரிவான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 177 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

புவியியல் ரீதியாக பாகிஸ்தானின் 40 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை பலுசிஸ்தான் கொண்டு உள்ளது. அதை கட்டுப்படுத்துவது என்பது மக்கள் தொகை நிறைந்த நகரத்தை கட்டுப்படுத்துவதை விட மிகவும் கடினமானது.

அதற்குப் பெருமளவிலான படைகளை நிலை நிறுத்த வேண்டும். நமது துருப்புக்கள் அங்கு நிலை நிறுத்தப்பட்டு, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவ்வளவு பெரிய பகுதியை பாதுகாத்து ரோந்து செய்வதால் ராணுவ வீரர்கள் உடல் ரீதியாக பலவீனமாக உள்ளனர்.

பெண்கள்,குழந்தைகள் உள்பட பொதுமக்களைக் கொன்ற பயங்கரவாதிகளுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது. குற்றவாளிகளுக்கும் பிரிவினைவாதக் குழுக்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது. குற்றக் கும்பல்கள் பலூச் விடுதலை ராணுவம் அமைப்பின் பெயரில் செயல்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com