

இஸ்லாமாபாத்:
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
இத்தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குள் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி லஷ்கர்-இ-தொய்பா உள்பட பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இந்தியாவை பழிவாங்குவோம் என்று லஷ்கர்-இதொய்பா பயங்கரவாத இயக்க துணைத் தலைவர் சை புல்லா கசூரி மிரட்டல் விடுத்து உள்ளார். அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் பேசியதாவது:-
ஜம்மு-காஷ்மீரின் ஆறுகள், அணைகள் விரைவில் எங்களுடையதாக இருக்கும். இது ஒரு கடினமான நேரம். ஆனால் எங்களின் தீர்மானம் வலுவாக உள்ளது என்று இந்திய பிரதமர் மோடியிடம் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் சகோதரர்களின் ரத்தத்திற்கு நாங்கள் பழிவாங்குவோம்.
இவ்வாறு அவர் பேசி உள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக சைபுல்லா கசூரி செயல்பட்டதாக கருதப்படுகிறது. இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்துபோன பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்காக கெஞ்சியதையடுத்து தாக்குதலை இந்தியா நிறுத்தியது.
இந்த நிலையில் லஷ்கர் தளபதி பகிரங்கமாக இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.