மயக்க மருந்தின்றி உறுப்புகளை இழக்கும் பிஞ்சுகள்.. 1 மணி நேரத்திற்கு 1 குழந்தையை கொல்லும் இஸ்ரேல் - எர்டோகன்

கடந்த 23 மாதங்களாக, இஸ்ரேல் ஒவ்வொரு மணிநேரமும் ஒரு குழந்தையைக் கொன்றுள்ளது.இரண்டு, மூன்று வயது குழந்தைகள் மயக்க மருந்து இல்லாமல் தங்கள் உறுப்புகளை இழக்கின்றனர்.
மயக்க மருந்தின்றி உறுப்புகளை இழக்கும் பிஞ்சுகள்..  1 மணி நேரத்திற்கு 1 குழந்தையை கொல்லும் இஸ்ரேல் - எர்டோகன்
Published on

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொதுச் சபையில் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆவேசமாக உரையாற்றினார்.

அவர் பேசியதாவது, "நம்மில் ஒவ்வொருவரின் கண் முன்னேயும், காசாவில் 700 நாட்களுக்கும் மேலாக இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த 23 மாதங்களாக, இஸ்ரேல் ஒவ்வொரு மணிநேரமும் ஒரு குழந்தையைக் கொன்றுள்ளது. இவை வெறும் எண்கள் அல்ல; ஒவ்வொன்றும் ஒரு அப்பாவியான உயிர்.

காசாவில் உள்ள மனிதாபிமான பேரழிவு நவீன வரலாற்றில் மிகப்பெரியது. இரண்டு, மூன்று வயது குழந்தைகள் மயக்க மருந்து இல்லாமல் குண்டுவெடிப்புகளால் தங்கள் உறுப்புகளை இழக்கின்றனர்.

குழந்தைகள் பசி மற்றும் மருந்து பற்றாக்குறையால் இறக்கும் உலகில் அமைதி இருக்க முடியுமா?. கடந்த நூற்றாண்டில் கூட மனிதகுலம் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டதில்லை.

இது மனிதகுலத்தின் மிக மோசமான நிலை. காசாவில் நடப்பது போர் இல்லை. இது ஒரு படையெடுப்பு, ஒரு இனப்படுகொலை, ஒரு மிகப்பெரிய படுகொலை கொள்கை" என்று தெரிவித்தார்.

பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்த எர்டோகன் மற்ற நாடுகளும் தாமதமின்றி செயல்பட வலியுறுத்தினார்.

காசாவில் உடனடியாக போர்நிறுத்தம், தடையற்ற மனிதாபிமான அணுகல் மற்றும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் ஆகியவற்றை எர்டோகன் கோரினார்.

மேலும் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை காசா மற்றும் மேற்குக் கரைக்கு அப்பால் சிரியா, ஈரான், யேமன், லெபனான் மற்றும் கத்தாருக்கு விரிவுபடுத்தி, பரந்த பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக எர்டோகன் குற்றம்சாட்டினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com