400 டிரோன்கள்.. 40 ஏவுகணைகள் - உக்ரைன் நகரங்களை துளைத்த ரஷியா - 6 பேர் பலி - 80 பேர் படுகாயம்

கீவ், லிவிவ் மற்றும் சுமி போன்ற முக்கிய நகரங்கள் இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டன. உக்ரைனின் 'ஆபரேஷன் ஸ்பைடர்வெப்'-க்கு பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
400 டிரோன்கள்.. 40 ஏவுகணைகள் - உக்ரைன் நகரங்களை துளைத்த ரஷியா - 6 பேர் பலி - 80 பேர் படுகாயம்
Published on

ரஷியா, 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இது கடந்த மூன்று ஆண்டுக்கால போரில் மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) ரஷிய படைகள் உக்ரைனின் ஒன்பது பிராந்தியங்களில் இந்த தாக்குதலை நடத்தியது. கீவ், லிவிவ் மற்றும் சுமி போன்ற முக்கிய நகரங்கள் இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டன.

இந்த தாக்குதல்களில் கியேவில் மூன்று தீயணைப்பு வீரர்கள், லுட்ஸ்கில் இரண்டு பொதுமக்கள் மற்றும் செர்னிஹிவில் ஒருவர் இறந்ததை உக்ரைனின் அவசர சேவைகள் உறுதிப்படுத்தின. இதன் மூலம் பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி "இன்று, நாட்டின் பல பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ரஷியா ஏவிய 400 ட்ரோன்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் 80 பேர் காயமடைந்தனர். இன்னும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம்" என்று கூறினார்.

மேலும், "துரதிர்ஷ்டவசமாக, உலகில் உள்ள அனைவரும் இந்தத் தாக்குதல்களைக் கண்டிக்கவில்லை. புதின் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறார். போரைத் தொடர அவர் நேரத்தை வாங்குகிறார்" என்று ஜெலன்ஸ்கி கூறினார்.

மறுபுறம், உக்ரைனின் 'ஆபரேஷன் ஸ்பைடர்வெப்'-க்கு பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com