4 முறை பிரதமராக இருந்தவரை வீழ்த்தி நேபாள் பிரதமராகும் 35 வயது ராப் பாடகர் - யார் இவர்? | Balendra shah

இளைஞர்களை திரட்டிப் போராடியதில் பாலேந்திர ஷா முக்கியப் பங்கு வகித்தார்.கர்நாடகாவில் முதுகலை பயின்றார்.
இடது - சர்மா ஒலி, வலது - பாலேந்திர ஷா 
இடது - சர்மா ஒலி, வலது - பாலேந்திர ஷா 
Published on

நேபாளத்தில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு ஜென் இசட் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஒலி பதவி விலகலுக்கு பிறகு அங்கு தேர்தல் நடந்தது. 

பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடித் தோ்தல் மூலமும், மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்டுவர். பெரும்பான்மைக்கு 138 இடங்கள் தேவை.

தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் கே.பி.சர்மா ஒலியும், நேபாளி காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவா் ககன் தாபாவும் பிரதமா் வேட்பாளா்களாகக் களமிறங்கினா்.

ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன் பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

நேபாளத்தின் செல்வாக்குமிக்க தலைவரான கே.பி. சர்மா ஒலியை அவரது சொந்தத் தொகுதியான ஜாப்பா-5 இல் பாலேந்திர ஷா மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் போட்டியிட்ட பாலேந்திர ஷா 68,348 வாக்குகள் பெற்ற நிலையில் சர்மா ஒலி 18,734 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன் மூலம் மூத்த தலைவர், முன்னாள் பிரதமர் சர்மா ஒலியை 35 வயது முன்னாள் மேயர் 49,614 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

74 வயதான ஒலி, 1990 முதல் இந்தத் தொகுதியில் ஏழு தேர்தல்களில் ஆறில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 4 முறை நேபாள் பிரதமர் பதவியில் இருந்துள்ளார். 

இதற்கிடையே நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 165 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பாலேந்திர ஷாவின் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் பாலேந்திர ஷா பிரதமர் பொறுப்பேற்க உள்ளார்.

யார் இந்த பாலேந்திர ஷா?

பாலேந்திர ஷா அடிப்படையில் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர் ஆவார்.  இசை மீதான ஆர்வத்தால் ராப் பாடகர் ஆகி அதன் மூலம் நேபாள் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்றார்.  

இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாலேந்திர ஷா முதுகலை பட்டம் பெற்றவர்.

2022 இல் காத்மாண்டு மாநகராட்சி மேயராக பாலேந்திர ஷா சுயேச்சையாக வென்று சாதனை படைத்தார்.

2026 பொதுத்தேர்தலில் போட்டியிட கடந்த ஜனவரி மாதம் மேயர் பதவியைத் துறந்து, ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சியில் இணைந்தார்.

2025 இல் கே.பி. ஒலி அரசு சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தபோது, அதற்கு எதிராக இளைஞர்களைத் திரட்டிப் போராடியதில் பாலேந்திர ஷா முக்கியப் பங்கு வகித்தார். அந்தப் போராட்டமே ஒலி அரசின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

இந்த தேர்தல் முடிவு ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிராக இளைஞர்கள் அளித்த தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com