

கரூரில் விஜய் பங்கேற்ற த.வெ.க. பரப்புரைக் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயரிழிந்தனர். உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் இழப்பீடு வழங்கியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய், "அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாக சந்திப்போம்" என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் மேலும் கூறியதாவது:-
கரூர் மக்களை சந்திக்க சட்டரீதியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாகச் சந்திப்போம்.
நாம் அறிவித்தபடி குடும்பநல நிதியாக ரூ.20 லட்சத்தை ஆர்டிஜிஎஸ் வழியாக அனுப்பி வைத்துள்ளோம். ரூ.20 லட்சத்தை நமது உதவிக்கரமாக ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வினால் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். குடும்ப உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம்.
இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.