

வேலூரில் இன்று நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் தன்மீது பழி போட்டிருந்ததாக பேசியிருந்தார். கூட்டத்தில் பேசிய அவர்,
"எனக்கொரு ஒரு புதிய நண்பர் கிடைத்துள்ளார். அது யாரு தெரியுமா? முதலமைச்சர் அவர்கள்தான். 'எனக்கு யாருமே எதிரிகள் இல்லை, அனைவரும் நண்பர்கள்தான்' என்று சொன்னார் முதலமைச்சர். அப்படியிருக்க, கரூர் விஷயத்தில் ஏன் என் மீது பழி போட்டீர்கள்? உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அப்படி பேசியிருப்பீர்களா? நாங்கள் எல்லாம் உங்களுக்கு நண்பர்கள் என்றால் ஒரு நிகழ்ச்சி நடத்துவதற்கு ஒரு அனுமதியோ இடமோ ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்? அனைத்தையும் நீங்களே செய்துவிட்டு அப்படியே போறபோக்கில் எதாவது பேசுகிறீர்களா?" எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்,
"முதலமைச்சர் அவரை குற்றம் சொல்லவில்லை. அவர் பேசுவதைப் பார்த்தால் யார் வேண்டுமானாலும் அவர் மீது குற்றம் சுமத்துவார்கள், யார் வேண்டுமானாலும் அவரைப் பழிப்பார்கள். நண்பகல் 12 மணிக்கே அங்கு வந்து கூட்டத்தில் உரையாற்றுவேன் என்று சொல்லிவிட்டு, கொளுத்தும் வெயிலில் தண்ணீரோ உணவோ இல்லாமல் மக்களை இரவு 7:30 மணி வரை காத்திருக்க வைக்கும் போது, மக்கள் இறக்கின்றனர். இதற்கு யார் காரணம்? ஏன் அவர் 12.30 மணிக்கு வரவில்லை? இதுவரை அவர் விளக்கவில்லை.
அவர் குடித்திருந்தாரா? நான் அதை கேட்க விரும்பவில்லை. ஆனால் 12 மணிக்கு வருகிறேன் எனக்கூறிவிட்டு ஏன் 7.30 மணிக்கு வந்தார்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.