பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி அஞ்சலி

தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 28 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி அஞ்சலி
Published on

பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

இன்று காலை 8 மணி அளவில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபாராணி மற்றும் இமானுவேல் சேகரன் குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முருகேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து அ.ம.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். அணி சார்பில் தர்மர் எம்.பி., நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தே.மு.தி.க. சார்பில் சுதீஷ், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், த.வெ.க. சார்பில் பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ், மதுரை மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.தங்க பாண்டியன், கல்லணை, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மலர்விழி பாலா, மதன் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

போலீசார் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினர், அமைப்புகளுக்கு நேரம் ஒதுக்கி இருந்தனர். அந்த நேரத்தில் மட்டுமே அவர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக இன்று காலை பெண்கள் உள்பட ஏராளமானோர் முளைப்பாரி எடுத்தும், வேல் குத்தியும் நினைவிடத்தில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தென்மண்டல ஐ.ஜி. தலைமையில் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில், 24 எஸ்.பி.க்கள், 70 டி.எஸ்.பி.க்கள் உள்பட 8 ஆயிரத்து 400 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவை தவிர 45 பறக்கும் படை வாகனங்கள், நவீன கேமராவுடன் 2 டிரோன்கள் பாதுகாப்பு பணியில் உள்ளன.

ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 28 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அஞ்சலி செலுத்த வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com