

தஞ்சாவூர்:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று இரவு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள அவருடைய வீட்டில் திடீரென சந்தித்து பேசினார். அரைமணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாகவும் வேறு ஏதும் காரணம் இல்லை. தமிழ்நாடு மக்கள் குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் என்ன கூறினார் என்பது எனக்கு தெரியாது. அவர் என்ன பேசி உள்ளார் என்பதை அறிந்த பிறகு அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன்.
எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை உள்ளதால் ஜெயலலிதாவின் கட்சி பலவீனம் ஆகி கொண்டுள்ளது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணியோடு ஜெயலலிதாவின் ஆட்சியை, அமைப்பார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள தொண்டர்களும், நிர்வாகிகளும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் தேர்தலுக்குப் பிறகு கட்சியை மீட்கும் பொறுப்பு எங்களிடம் வரும். தேசிய ஜனநாய கூட்டணியில் நாங்கள் உள்ளோம். அதில் தான் தொடருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வைத்திலிங்கம், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.