பல்கலைக்கழகங்களை உங்கள் அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள்- தமிழிசை சவுந்தரராஜன்

கஸ்தூரி ரங்கன் தலைமையில் பல லட்சம் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு கொண்டுவரப்பட்டது புதிய கல்விக் கொள்கை. உங்கள் விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப தமிழக மாணவி மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து கொண்டிருக்கிறீர்கள்.
பல்கலைக்கழகங்களை உங்கள் அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள்- தமிழிசை சவுந்தரராஜன்
Published on

சென்னை:

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் பல்கலைக்கழகங்களில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக்கூடாது என்று துணை வேந்தர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீங்கள் நேற்று துணைவேந்தர்களை கூப்பிட்டு என்ன சொல்லி இருக்கிறீர்களோ அதுதான் புதிய கல்வி கொள்கை. நீங்கள் ஒருவர் பேசுவதற்காக மட்டும் எழுதி கொடுக்கப்பட்டது அல்ல அது. மரியாதைக்குரிய கஸ்தூரி ரங்கன் தலைமையில் பல லட்சம் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு கொண்டுவரப்பட்டது புதிய கல்விக் கொள்கை.

அதை அறிமுகப்படுத்தும் போது பாரத பிரதமர் மோடி சொன்னது நம் இந்திய குழந்தைகளை வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு உயர்த்துவது தான் இந்த கல்வி. ஆக புதிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக படிக்காமல் மற்ற மாநிலங்கள் எல்லாம் பின்பற்றி மாணவ மாணவிகளை உலக அரங்கிற்கு உயர்த்திக் கொண்டிருக்கும்போது நீங்கள் மோடி எதிர்ப்பு என்ற கருப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு உங்கள் விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப தமிழக மாணவி மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து கொண்டிருக்கிறீர்கள். உலகளாவிய தலைமையகமாக தமிழக பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும் என்று சொல்லிவிட்டு பல்கலைக்கழகங்களை உங்கள் தலைமைக் கழக அலுவலகங்களாக மாற்றி விடாதீர்கள். அறிவு அரங்கமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்களை உங்கள் அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள் என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com