தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதம்- அமித் ஷா உத்தரவாதம் அளிக்க தயாரா? தயாநிதி மாறன் கேள்வி

தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம்.உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா?
தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதம்- அமித் ஷா உத்தரவாதம் அளிக்க தயாரா? தயாநிதி மாறன் கேள்வி
Published on

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது என்றும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதம் அளிக்க தயாரா? என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தி.மு.க., எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 84ன் படி 2026க்கு பின் மேற்கொள்ளப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டாக வேண்டும்.

அதை மனதில் வைத்தே மக்கள் தொகை கணக்கெடுப்பைக் காலம் தாழ்த்தி வந்து தற்போது 2027இல் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.

ஒன்றிய பாஜக அரசின் இந்த சதியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறார். நியாயமான தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என இதனால் பாதிக்கப்போகும் மாநிலங்களின் முதல்வர்கள், தலைவர்களை ஓரணியில் அணிதிரட்டி எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

அப்போதெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் வீண் பதற்றத்தை உண்டாக்குகிறார் எனக் கூறி வந்தவர்களின் குட்டு இப்போது மக்கள் முன் அம்பலப்பட்டு கிடக்கிறது. இதோ நம் வீட்டு வாசல் வரை வந்துவிட்டது அந்த ஆபத்து.

இப்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொல்ல போகிறார். தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம்.

மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா? பதில் சொல்லுங்கள் அமித்ஷா அவர்களே!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com