பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: தனது ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த வைரமுத்து

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ் தங்கியிருந்தார்.சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 வீரர்கள் புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரையிறங்கினர்.
பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: தனது ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த வைரமுத்து
Published on

சென்னை:

விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ். எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பூமிக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து பால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதன்மூலமாக சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச் அவர்களும், அங்கிருந்த மேலும் 2 வீரர்களோடு இணைந்து பயணித்து, பத்திரமாக புளோரிடா அருகே கடலில் தரையிறங்கினர். பூமி திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பத்திரமாக பூமி திரும்பி சுனிதா வில்லியம்ஸ்-க்கு கவி பேரரசு வைரமுத்து தனது ஸ்டைலில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில்,

சுனிதா வில்லியம்ஸின்

பூமி திரும்பல்

ஒரு பெண்ணின் வெற்றியோ

நாட்டின் வெற்றியோ அல்ல;

மகத்தான மானுடத்தின் வெற்றி

அவர்

மண்ணில் இறங்கும்வரை

இரண்டு மடங்கு துடித்தது

பூமியின் இருதயம்

பெண்ணினத்துக்குக்

கூடுதல் பெருமை சேர்த்துவிட்டார்

அந்த வேங்கை மகள்

அவரது உயரம்

நம்பிக்கையின் உயரம்

அவரது எடை

துணிச்சலின் நிறை

மரணத்தின்

உள்கூடுவரை சென்றுவிட்டு

வாழ்வுக்குத் திரும்பியிருக்கிற

சுனிதா வில்லியம்ஸை

பூமியின் ஒவ்வொரு பொருளும்

வரவேற்கின்றது

இந்த விண்வெளிப் பிழை

எதிர்கால அறிவியலைத்

திருத்திக்கொள்ளும்

ஆதாரமாக விளங்கும்

பிழை என்பது அறியாமை;

திருத்திக்கொள்வது அறிவு

என்ற பாடத்தை

அறைந்து சொல்லும்

சுனிதா வில்லியம்ஸ் அனுபவம்

வந்தவரை வாழ்த்துவோம்

மானுடத்தை வணங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com