

நெல்லை:
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்திற்கு தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்த நிலையில், விசாரணைக்கு முன்பே நடிகர் விஜய் "நான் சென்னையில் தான் இருக்கிறேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்" என வீரவசனம் பேசினார்.
தற்போது சி.பி.ஐ. 12-ந்தேதி ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வசனத்தை இப்போது பயன்படுத்துவாரா? அல்லது பா.ஜ.க.வுடன் இணைந்து நாடகம் ஆடுகிறாரா? என்று தெரியவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று சி.பி.ஐ. விசாரணையை கேட்டாலே நியாயம் கிடைத்துவிடும் என்று நினைப்பது தவறு. ஆந்திராவில் ஒரு ரசிகர் இறந்ததற்கு ஒரு நடிகரே கைது செய்யப்பட்டார். தமிழக அரசு இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தி இருந்தால் சட்டம் தன் கடமையை செய்திருக்கும்.
மத்திய அரசு தான் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குகிறது. அப்படியிருக்க, படம் வெளியாவதில் சிக்கல் இருப்பது போலவும், அதை தொண்டர்கள் மத்தியில் ஒரு கொதிநிலையை உருவாக்குவதற்காகவும் பா.ஜ.க.வும் விஜய்யும் இணைந்து செயல்படுவதாக தெரிகிறது.
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கும், பிரதமருக்கும் பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது என பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி பலமுறை கூறியும் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அதுபோன்று காங்கிரஸ் கட்சியில் பலர் கூட்டணி குறித்து பேசினாலும் தலைமை நல்ல முடிவு எடுப்பார்கள் என்றார்.