மூத்த அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீனிவாசன் மறைவு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மூத்த அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீனிவாசன் மறைவு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
Published on

இந்தியாவின் உள்நாட்டு அணுசக்தி திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூத்த விஞ்ஞானியும், அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவருமான எம்.ஆர். ஸ்ரீனிவாசன் (95) இன்று காலமானார்.

கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் ஊட்டியில் வசித்து வந்த நிலையில் வயது மூப்பு காரணமாக இன்று அவரது உயிர் பிரிந்தது.

1955 இல் அணுசக்தித்துறையில் தனது பணியை தொடங்கிய ஸ்ரீனிவாசன், இந்தியாவின் முதல் அணு உலையை உருவாக்கிய ஹோமி பாபாவுடன் பணியாற்றி உள்ளார்.

1959 இல் இந்தியாவின் முதல் அணுசக்தி நிலையத்தின் தலைமை பொறியாளராகத் தனது பங்களிப்பை வழங்கிய ஸ்ரீனிவாசன், 1967 இல் மெட்ராஸ் அணுசக்தி நிலயத்தின் தலைமை இன்ஜீனியர் ஆனார்.

1974ஆம் ஆண்டு அணுசக்தி துறையின் மின் திட்டங்கள் பொறியியல் பிரிவு இயக்குநர், 1984-ஆம் ஆண்டு அணுசக்தி வாரியத்தின் தலைவர், 1987ஆம் ஆண்டு அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

அணுசக்தித் திட்டத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, டாக்டர் சீனிவாசனுக்கு நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் தூணான டாக்டர் எம்.ஆர். ஸ்ரீனிவாசனின் மறைவுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம்.

இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் தந்தையான டாக்டர் ஹோமி ஜே. பாபாவுடன் நமது முதல் அணு உலையை உருவாக்கினார்.

பல தசாப்தங்களாக, அவர் 18 அணு மின் அலகுகளை உருவாக்கத் தலைமை தாங்கினார். எரிசக்தி தன்னிறைவை ஏற்படுத்தினார். உண்மையான தேசத்தைக் கட்டியெழுப்பியவர். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com