மிதுன் சக்கரவர்த்தி ஓட்டலில் ரூ.20 லட்சம் மோசடி- நடிகரின் பெயரில் குறுஞ்செய்தி அனுப்பி கைவரிசை

மிதுன் சக்கரவர்த்தி ஓட்டல் மேலாளரை தாதா என்று அழைப்பது வழக்கம். நாக்பூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கி கணக்கிற்கு பணம் சென்று உள்ளது தெரியவந்தது.
மிதுன் சக்கரவர்த்தி ஓட்டலில் ரூ.20 லட்சம் மோசடி- நடிகரின் பெயரில் குறுஞ்செய்தி அனுப்பி கைவரிசை
Published on

ஊட்டி:

பிரபல பாலிவுட் நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான மிதுன் சக்கரவர்த்திக்கு ஊட்டியில் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்தநிலையில், அந்த ஓட்டல் மேலாளரின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் செயலியில் குறுஞ்செய்தி வந்தது.

அதில், 'குன்னூரில் முக்கிய விஷயமாக பணியில் உள்ளேன். நான் இருக்கும் இடத்தில் செல்போன் சிக்னல் பிரச்சினை உள்ளது. எனவே, ஓட்டல் சம்பந்தமான வங்கி கணக்குகளில் எவ்வளவு பணம் உள்ளது என்றும், அந்த பணத்தை நான் அனுப்பும் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும்' கூறப்பட்டு இருந்தது.

வழக்கமாக மிதுன் சக்கரவர்த்தி ஓட்டல் மேலாளரை தாதா என்று அழைப்பது வழக்கம். அந்த பெயரில் வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி வந்ததால், மேலாளருக்கு சந்தேகம் ஏற்படவில்லை.

அதற்கு பதில் அளித்த மேலாளர், 'ஓட்டலுக்கு சொந்தமான பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ.70 லட்சமும், நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.30 லட்சமும் உள்ளது' என்று தெரிவித்து உள்ளார். முதல் கட்டமாக ரூ.20 லட்சம் உடனடியாக அனுப்புமாறு வாட்ஸ்-அப் செயலியில் வங்கி கணக்கு விவரங்களுடன் பதில் வந்து உள்ளது.

இதை நம்பிய மேலாளர், வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி விட்டார். இதையடுத்து நிரந்தர வைப்பு தொகையில் உள்ள ரூ.30 லட்சத்தையும், அதன் பின்னர் மற்ற கணக்குகளில் உள்ள ரூ.50 லட்சத்தையும் அனுப்புமாறு வாட்ஸ்-அப் செயலியில் குறுஞ்செய்தி வந்தது.

இதற்கிடையில் மிதுன் சக்கரவர்த்தி, மேலாளரை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது நீங்கள் கூறியபடி ரூ.20 லட்சத்தை, உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டேன் என்று மேலாளர் கூறியபோது தான், மோசடி நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டல் மேலாளர் ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நிரந்தர வைப்பு தொகையில் இருந்த பணம் மற்றும் மற்ற கணக்குகளில் இருந்த பணத்தையும் அனுப்ப எடுத்த நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தினார். இதனால் ரூ.80 லட்சம் தப்பியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, எந்த வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரித்தனர்.

இதில் நாக்பூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கி கணக்கிற்கு பணம் சென்று உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com