

தஞ்சாவூா்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்து தஞ்சையில் இன்று மாநகர அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது எனக்கூறி டெல்லியில் நிதி ஆயோக் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. ஆனால் தற்போது இன்று நிதி ஆயோக் மாநாட்டில் கலந்து கொள்ள முதலமைச்சர் டெல்லி சென்றுள்ளார்.
வழக்கு குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகவே அவர் டெல்லி சென்றுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. கடந்த 2011 தேர்தலில் தொடர் மின்வெட்டுப் பிரச்சனையால் தி.மு.க ஆட்சியை இழந்தது. தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதால் 2026 தேர்தலில் மீண்டும் ஆட்சியை தி.மு.க இழப்பது உறுதி. மக்கள் அ.தி.மு.க பக்கம் உள்ளனர்.
எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவது உறுதியாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.