கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்

இந்தாண்டிற்கான திருவிழா வருகிற 27 மற்றும் 28-ந் தேதிகளில் நடக்கிறது. படகில் செல்ல ஒருவருக்கு ரூ. 2 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்
Published on

ராமேசுவரம்:

இந்தியாவின் தென் எல்லையான ராமேசுவரம் தீவிலிருந்து 22 நாட்டிக்கல் மைல் தொலைவில் மன்னார் வளைகுடா கடலில் இந்திய-இலங்கை எல்லையையொட்டி கச்சத்தீவு அமைந்துள்ளது. கடந்த 1974-ம் ஆண்டு வரை இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த இந்த தீவு பின்னர் இலங்கையுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக அந்த நாட்டிற்கு வழங்கப்பட்டது.

இந்த தீவில் உள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். 2 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் இந்திய-இலங்கையை சேர்ந்த பக்தர்கள் இணைந்து கலந்து கொள்வார்கள். விழாவில் இரு நாட்டு மக்களும் சகோதரத்துவத்துடன் சந்தித்து தாங்கள் கொண்டு வந்த பொருட்களை பரிமாற்றம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், இந்தாண்டிற்கான திருவிழா வருகிற 27 மற்றும் 28-ந் தேதிகளில் நடக்கிறது. இதற்காக ராமேசுவரத்திலிருந்து 85 விசைப்படகுகள் மற்றும் 24 நாட்டுப்படகுகளில் 4 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். படகில் செல்ல ஒருவருக்கு ரூ. 2 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் 15-ந் தேதி முதல் 25 வரை வழங்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்பட்டது.

கச்சத்தீவில் வருகிற 27-ந் தேதி மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் அந்தோணியார் தேவாலய திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து திருஜெபமாலை, இரு நாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும், இரவில் அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனியும் நடைபெறுகிறது.

மறுநாள் (பிப்.28-ந் தேதி) காலை 7.30 மணியளவில் சிறப்பு திருப்பலி பூஜையும், கூட்டுப்பிரார்த்தனையும், தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது. இதில் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து தலா 4 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கச்சத்தீவில் நடைபெற்று வருகின்றன. தேவாலயத்தை சுத்தம் செய்தல், சாலை அமைத்தல், தற்காலிக கப்பல் இறங்குதளம், முள் செடிகளை அகற்றி பாதை அமைத்தல், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகைளை ஏற்படுத்துதல், மின்சார வசதி உள்ளிட்ட பணிகள் தற்போது அங்கு நடைபெற்று வருகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காக மருத்துவ உபகரணங்களுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com