தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

பிளஸ்-2 தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர்.இன்று தொடங்கிய பொதுத்தேர்வு 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது
Published on

சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 7545 பள்ளிகளில் படிக்கும் 8 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதினார்கள்.

3412 மையங்களில் தீவிர கண்காணிப்புடன் தேர்வு நடந்தது. தமிழ் முதல் தாள் தேர்வு இன்று நடைபெற்றது. தேர்வுக் கூடங்களில் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் மாணவ - மாணவிகள் தேர்வு எழுதினர்.

4540 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கல்வி அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் பிரிந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். 44,624 கண்காணிப்பாளர்கள் இத்தேர்வினை கண்காணிக்கும் பணிகள் ஈடுபட்டனர்.

சிறைவாசிகள், தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அவர்கள் சொல்வதை விடைத்தாளில் எழுதினார்கள்.

காலை 10.15 மணிக்கு தேர்வு தொடங்கியது. பகல்1.15 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெற்றது. முதல் நாள் தமிழ் தேர்வு என்பதால் மாணவர்கள் மிக உற்சாகமாக எழுதினார்கள். ஒவ்வொரு தேர்விற்கும் குறிப்பிட்ட இடைவெளி விடப்பட்டு தேர்வு நடக்கிறது.

தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத் துறை எச்சரித்து உள்ளது. காப்பி அடித்தல், விடைத்தாளை மாற்றுதல், ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடில் ஈடுபடும் மாணவர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுதுவதற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரி குலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரிடம் ஆசி பெற்று தேர்வு கூடத்திற்கு சென்றார்கள்.

பதட்டம் இல்லாமல் தேர்வு எழுதுவதற்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டிருந்ததால் மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு தேர்வுத்துறை விதிமுறைகளின்படி அனுமதிக்கப்பட்டனர்.

அனைத்து கல்வி மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அதிகாரிகள் வினாத்தாள் விநியோகத்தில் எவ்வித குளறுபடியும் ஏற்படாமல் கவனித்தனர். அந்தந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. பிளஸ்-2 பொதுத்தேர்வு 26-ந்தேதி நிறைவடைகிறது.

இதற்கிடையில் நாளை 3-ந்தேதி கடந்தாண்டு பிளஸ்-1 தேர்வில் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு 27-ந்தேதி நிறைவடைகிறது.

பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முறை இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com