

சென்னை:
சென்னையில் பயணிகளால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரெயில் சேவை நீட்டிப்பு திட்டம் நேற்று தொடங்கப்பட இருந்தது. ஆனால், ரெயில்வே பாதுகாப்பு ஆணையரால் கண்டறியப்பட்ட சில தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக இந்த சேவை தற்காலிகமாக தள்ளிப்போய் உள்ளது.
5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பறக்கும் ரெயில் சேவை நீட்டிப்பு திட்டம் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக தாமதமாகி வந்த இந்த திட்டம் கடந்த நவம்பர் மாதத்தில் முடிவடைந்தது. தண்டவாள அமைப்பு, மின்மயமாக்கல், சிக்னல் அமைப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 7 மற்றும் டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் சரக்கு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
கடந்த 5-ந்தேதி தலைமை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக் குமார் கார்க் அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்தி ஆய்வு செய்தார். அப்போது புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் மற்றும் பரங்கிமலை ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்ட 3 பறக்கும் ரெயில் நிலையங்களிலும் அதிவேக சோதனையை ஆய்வு செய்தார்.
10-ந்தேதி முதல் பறக்கும் ரெயில் சேவை தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இதனால் வேளச்சேரி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பரங்கிமலை பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்த சேவை காரணமாக சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை நேரடியாக பறக்கும் ரெயிலில் செல்ல முடியும். மேலும் தென்சென்னை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். பயண நேரமும் கணிசமாக குறையும். புறநகர் மின்சார ரெயிலிலும் எளிதாக மாறிச்செல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எழும்பூரில் தற்போது மின்சார ரெயில் பிளாட்பார புனரமைப்பு பணிகள் நடந்து வருவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. எனவே மின்சார ரெயிலில் வருபவர்கள் சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரெயில் நிலையங்களுக்கு செல்வதற்கு பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பறக்கும் ரெயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி பறக்கும் ரெயில் சேவை தொடர்பாக நடந்த ஆய்வின்போது சில தொழில்நுட்ப சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன. தலைமை பாதுகாப்பு ஆணையர் டெல்லிக்கு சென்றுவிட்ட நிலையில், தேவையான இறுதி அறிக்கை நேற்று முன்தினம் வந்திருக்க வேண்டும். ஆனால் அறிக்கை வராததால், சில கூடுதல் பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் பாதுகாப்பு அனுமதி கிடைக்கும் வரை பறக்கும் ரெயில் சேவையை தொடங்க முடியாது என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அறிக்கை வந்த பிறகு கூடுதல் பணிகள் முடிக்கப்பட்டு பறக்கும் ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பறக்கும் ரெயில் சேவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
ஏற்கனவே புறநகர் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தாமதம் சென்னை மக்களின் அன்றாட பயணத்தை மேலும் சிரமப்படுத்தி உள்ளது.