மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு: போலீசார்- இந்திய மாணவர் அமைப்பு இடையே தள்ளுமுள்ளு

யுசிஜி புதிய விதிகளின் வரைவு அறிக்கையை திரும்ப வேண்டும் என தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு: போலீசார்- இந்திய மாணவர் அமைப்பு இடையே தள்ளுமுள்ளு
Published on

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை மறுக்கிறது.

அதனால் யுசிஜி புதிய விதிகளின் வரைவு அறிக்கையை திரும்ப வேண்டும் என தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இதுதவிர மத்திய அரசு தமிழ்நாடு கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,158 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் தாமதம் செய்கிறது. இது குறித்த சமீபத்திய கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழ்நாட்டில் தேசிய கல்வி கொள்கையை இதுவரை ஏற்காமல் உள்ளனர். மும்மொழி கொள்கையை ஏற்காத வரை தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க இயலாது" என்று கூறினார்.

இவரது கருத்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு இடமே இல்லை என ஒருமித்த குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புதிய யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெறவும், மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரை போலீசார் தடுக்க முயன்றதால் போலீசார் மற்றும் மாணவர் அமைப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com