விஜயுடன் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை- டி.டி.வி. தினகரன்

யார் மீதும் விருப்பு, வெறுப்பு இன்றி செயல்படுகின்ற கட்சி அமமுக.2026-ல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல, உணர்வு ரீதியாக விஜய் ஏற்படுத்துவார்.
விஜயுடன் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை- டி.டி.வி. தினகரன்
Published on

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரம் மேலும் கூறியதாவது:-

யூகங்களுக்கு பதில் சொல்ல வேண்டாம். நான் எப்போதும் எதார்த்தமாக, நம்புவதை பேசக்கூடியவன். யார் மீதும் விருப்பு, வெறுப்பு இன்றி செயல்படுகின்ற கட்சி அமமுக. யாரை பார்த்தும் எங்களுக்கு பொறாமை இல்லை.

இன்றைக்கு கட்சி ஆரம்பிக்கும்போது ஒருவரை அண்ணன், தம்பி என்று சொல்வது, அதற்கு பிறகு அவர்களை ரோட்டில் நின்று திட்டுவதெல்லாம் எங்களுக்கு தெரியாது.

எங்களை விமர்சிப்பவர்களுக்கு பதில் விமர்சனம் கொடுப்போம். மற்றபடி, எங்களுக்கு யாரை பார்த்தும் பொறாமை கிடையாது.

விஜய் அவர்களை பார்த்து அந்த கருத்தைதான் சொன்னேன். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. பிரபலமான நடிகர் உச்சத்தில் இருக்குமபோதே அரசியலுக்கு வந்திருக்கிறார். மக்கள் மத்தியில் அதனால் ஏற்படுகின்ற தாக்கம் தேர்தலில் ஏற்படும்.

2026-ல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல, உணர்வு ரீதியாக விஜய் ஏற்படுத்துவார் என்று சொல்வது எனது அனுபவத்தில் சொல்வது.

அதற்காக, நீங்கள் விஜயுடன் கூட்டணிக்கு போவீர்களா என்றால், அதைப்பற்றி எல்லாம் நான் முடிவு செய்யவில்லை.

நாங்கள் அமமுக இப்போது சுதந்திரமாக இருக்கிறோம். உறுதியாக வெற்றிப்பெறக் கூடிய கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவோம். இது தான் எங்கள் நிலைப்பாடு.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com