97 சதவீத தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது: புதிய ஆய்வில் தகவல்

2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆய்வில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்தது.தமிழகத்தில் தற்போது கொரோனா நோயின் தீவிர தன்மை மிகப்பெரும் அளவுக்கு குறைந்தே இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
97 சதவீத தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது: புதிய ஆய்வில் தகவல்
Published on

சென்னை:

தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக கடந்த 2 வாரங்களாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த வைரஸ் அதிக வீரியம் இல்லாதது என்பதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு தகவல் இன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மக்கள் மத்தியில் எப்படி உள்ளது? என்பது தொடர்பாக இதுவரை 5 கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 2020 அக்டோபர் மாதம் முதல் கட்ட ஆய்வு நடந்த போது தமிழக மக்களில் 32 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த 2-ம் கட்ட ஆய்வில் 29 சதவீதம் பேருக்கும், மே மாதம் நடந்த ஆய்வில் 70 சதவீதம் பேருக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதியானது. 2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆய்வில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரிய வந்தது.

தற்போது (2025) கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழக மக்களில் 97 சதவீதம் பேருக்கு கொரோனா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா நோயின் தீவிர தன்மை மிகப்பெரும் அளவுக்கு குறைந்தே இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பொது சுகாதாரம் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com