தமிழக அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே ஆளுநர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார் - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படக் கூடிய துரோகிகள்.பா.ஜ.க. ஆதரவாளர்களே ஒன்றிய அரசை கழுவி ஊற்றுகிறார்கள்.
தமிழக அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே ஆளுநர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார் - மு.க.ஸ்டாலின்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மலப்பாம்பாடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1.30 கோடி பெண்கள் மாதம் ரூ.1000 பெறுகின்றனர். விடியல் பயணம் திட்டத்தின் மூலம் 900 கோடி முறை பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர். ஒட்டுமொத்த நாடே திரும்பி பார்க்கக் கூடிய வளர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கிறோம்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு நமக்கு தரவேண்டிய நிதியை தரவில்லை. குடைச்சல் கொடுப்பதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டிக்கக்கூடிய ஆளுநர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படக் கூடிய துரோகிகள். அந்த துரோகிகளுக்கு அடிமை சாசனம் எழுதி தந்து சரணாகதி அடைந்த அடிமைகள் என்று அனைத்தையும் முறியடித்து நாம் முன்னேறி இருக்கிறோம். இதுதான் திராவிட மாடல்.

இந்த வளர்ச்சிதான் பலரது கண்களை கூச செய்கிறது. வயிறு எரிகிறது, அதனால்தான் தமிழ் நாட்டுக்கு எப்படியாவது அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று பார்க்கிறார்கள். பொறுப்புள்ள ஒன்றிய அமைச்சர், பொறுப்பில் இருப்பவர்கள் கூட வெறுப்புணர்ச்சியை பரப்புகிறார்கள். தமிழ் நாட்டில் வெறுப்புணர்ச்சியை பரப்பினால் அதன் மூலமாக வடமாநிலங்களில் வாக்குகளை பெற முடியும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் நினைப்பது நடப்பதில்லை. தமிழ்நாட்டை பற்றி இப்படி பேசுகிறார்களே என்று வடமாநில யூடியூபர்கள் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர். பா.ஜ.க. ஆதரவாளர்களே ஒன்றிய அரசை கழுவி ஊற்றுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வந்த 100 நாள் வேலை திட்டத்தை ஒன்றிய அரசு மொத்தமாக நீக்கி விட்டது.

இதை எதிர்த்து பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நாம் தான் போராடிக் கொண்டு இருக்கிறோம். தன்னை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதை எதிர்த்து குரல் கொடுக்க துணிச்சல் இல்லாமல் ஆதரித்து பேசுகிறார். இதற்கு ஆதரவாக அ.தி.மு.க. மாநிலங்களவையில் வாக்களித்து இருக்கிறது.

ஒன்றிய பா.ஜ.க.வின் ஆட்சியாளர்களும், அ.தி.மு.க. அடிமைகளும் நம் அரசின் சாதனைகளை மறைக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் திண்டாடுகிறார்கள். அவர்களின் எந்த பொய்யையும் மக்களான நீங்கள் ஏற்க தயாராக இல்லை. அதனால்தான் திராவிட மாடல் 2.0 அமைவது உறுதி என்று நான் உரக்க சொல்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com