

சிதம்பரம்:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ரெயில் மூலம் சிதம்பரம் வந்தார். அவருக்கு ரெயில் நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் . இதனை தொடர்ந்து ரெயில் நிலையத்தில் இருந்து கீழரதவீதியில் உள்ள தனியார் விடுதி வரை ரோடு ஷோ நடத்தினார். அப்போது பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் கீழரதவீதியில் உள்ள தனியார் வீடுதியில் தங்கினார்.
இன்று காலை அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ரெயிலடி திடலில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.