சட்டம் ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை: அமைச்சர் ரகுபதி

மக்கள் எங்களுக்கு சான்றிதழ் தரவேண்டும். எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் எங்களுக்கு வேண்டாம்.
சட்டம் ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை: அமைச்சர் ரகுபதி
Published on

புதுக்கோட்டை:

அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் வைத்தது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று. அ.தி.மு.க. ஆட்சியிலும் எடப்பாடி பழனிசாமி படம் போடப்பட்டது. மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயரை வைத்தார்கள். அந்த சட்ட மசோதா ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மீண்டும் நாங்கள் அந்த சட்ட மசோதாவை கொண்டு வந்தபோது கவர்னர் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பினார். அதற்கு சேர்த்துதான் உச்ச நீதிமன்றத்தில் கலைஞருக்காக, அவர்களது தலைவர் ஜெயலலிதாவிற்கும் சேர்த்து அவரது பெயரை வைக்க வேண்டும் என்று வாதாடி பெற்றிருக்கின்ற இயக்கம் தான் தி.மு.க.

எங்களுக்கு கட்சி வேறுபாடு கிடையாது. எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு எங்களுடைய முதலமைச்சர் பெயரை சூட்ட வேண்டுமோ அந்த பெயரை சூட்ட கடமைப்பட்டுள்ளோம். அதையெல்லாம் விமர்சித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உள்ளது வரவேற்கத்தக்கது.

பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் மோடியால் வளர்ச்சி விகிதத்தை எட்ட முடிந்ததா? இல்லை... மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான் தமிழ்நாடு இந்த வளர்ச்சி விகிதத்தை எட்டி உள்ளோம். இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசுடைய உழைப்பு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்திருக்கின்ற முயற்சிக்கு கிடைத்து உள்ள மிகப்பெரிய அங்கீகாரம்.

திருவாரூரில் கலைஞர் பல்கலைக்கழகம் திறப்பதற்கு கவர்னருக்கு அனுப்பிய சட்ட மசோதாவை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். ஜனாதிபதி என்ன பதிலளிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒரு எதிர்க்கட்சி சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கின்றது என்று சான்றிதழ் கொடுக்க மாட்டார்கள். நாங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அந்த சான்றிதழை எதிர்பார்க்கவில்லை. மக்கள் எங்களுக்கு சான்றிதழ் தரவேண்டும். அந்த மக்கள் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம், நலமாக இருக்கின்றோம் என்று மக்கள் எங்களது தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சான்றிதழ் தருகின்றனர். அந்த சான்றிதழ் எங்களுக்கு போதும். எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் எங்களுக்கு வேண்டாம்.

திருப்பூரில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் போலீஸ்காரரை தாக்கி விட்டு தப்பா சென்றதால் தான் இந்த என்கவுண்டர் சம்பவம் நடந்துள்ளது. காவல்துறைக்கு பாதுகாப்பு தேவையில்லை. காவல்துறை தனியாக போய் சில சமயங்களில் இது போன்ற கொலை சம்பவம் நடைபெறுகிறதே தவிர வேறு எங்கேயும் கிடையாது.

இதைவிட மோசமான சம்பவங்கள் எல்லாம் வட மாநிலங்களில் வருகின்றது. இந்தியாவிலேயே தொழில் தொடங்கவும், வசிக்கவும் தகுந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். ஆணவ படுகொலைகள் எங்களுக்கு தெரிந்து நடப்பது கிடையாது. தெரிந்தால் நிச்சயம் அதை தடுத்து விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com