

சென்னை:
அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி நாங்க எங்க போனாலும் ஆம்புலன்ஸ் வருகிறது என்று கூறுகிறார். பிரதான சாலையில் எடப்பாடி பழனிசாமி போகிறார். 1330 ஆம்புலன்ஸ் தமிழ்நாடு முழுவதும் செல்கிறது.
உயிர் காப்பதற்காக ஆம்புலன்ஸ் செல்கிறது. ஆம்புலன்ஸ் விரைந்து சென்று உயிரைக் காக்க வேண்டும். உயிர் காக்கும் சேவையாக ஆம்புலன்ஸ் சேவை நடைபெற்று வருகிறது. இவர் ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு நான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் வருகிறது என்று கூறுகிறார்.
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்று பழமொழி கூறுவார்கள். அது போல எடப்பாடி பழனிசாமிக்கு ஆம்புலன்ஸ்-ஐ பார்த்தால் ஏதோ ஒன்று தெரிகிறது போல?
மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்கள் தொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை பார்த்து ஒரு மிரட்டும் தொனியில் பேசி வருகிறார்.
அநாகரிகமான பேச்சை இதோடு எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஓட்டுநர் நோயாளியாக செல்வார் என்று கூறுவது நல்லதல்ல, அவர் இது போன்ற போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
108 ஆம்புலன்ஸ் சேவை போன்ற சிறப்பான மருத்துவ சேவை இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. அப்படிப்பட்ட தமிழக அரசின் மருத்துவ சேவையை குறை கூறி பேசும் அவரது செயல் தனது தரத்தை குறைத்துக் கொள்ளும் செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.