தொடரும் அத்துமீறல்கள்! பழனி மலைக்கோவிலில் த.வெ.க. பாடலை ஒலிக்க செய்த நபர்!

பக்தர்கள் வசதிக்காக பழனி மலைக்கோவிலில் 100-க்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் அமைப்பு.ஒலிப்பெருக்கியில் திடீரென த.வெ.க. பாடல் ஒலித்ததால் பக்தர்கள் அதிர்ச்சி.
தொடரும் அத்துமீறல்கள்! பழனி மலைக்கோவிலில் த.வெ.க. பாடலை ஒலிக்க செய்த நபர்!
Published on

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக பழனி மலைக்கோவில், படிப்பாதை, கிரிவலப் பாதை, அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தவறவிடும் உடமைகள், பொருட்கள், காணாமல் போகும் குழந்தைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்த அறிவிப்புகளை மலைக்கோவில் அலுவலகத்தில் உள்ள ஒலிபெருக்கியில் பேசினால் பழனி மலை மற்றும் அடிவாரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒலிப் பெருக்கிகளில் கேட்கும் விதமாக பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று பழனி மலைக் கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் படிப்பாதையில் உள்ள ஒலிப்பெருக்கியில் தனது செல்போனை இணைத்து அதில் த.வெ.க. பாடலை ஒலிக்கச்செய்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்தர்களின் முக்கிய தேவை மற்றும் பிரச்சனைகள் குறித்து அறிவிக்கும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் முருகன், விநாயகர், சிவன் உள்ளிட்ட தெய்வப் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பப்படும் நிலையில் திடீரென த.வெ.க. பாடல் ஒலித்தது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனி கோவிலில் த.வெ.க. பாடல் ஒலிக்கப்பட்டு அது பழனி அடிவாரம் முழுவதும் கேட்டிருக்குமா? அல்லது குறிப்பிட்ட அந்த ஒரு இடத்தில் மட்டும் ஒலிபரப்பானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் கோவிலில் உள்ள ஒலிப்பெருக்கியில் செல்போனை இணைத்து த.வெ.க. பாடலை ஒலிக்கவைத்த இளைஞர் யார்? என்று அடையாளம் கண்டு, அவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com