தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

போராட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என போராட்டக்காரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.போராட உரிமை இருந்தாலும் சாலை அல்லது நடைபாதையை ஆக்கிரமித்து போராட அனுமதிக்க முடியாது.
தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
Published on

சென்னை:

சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றில் தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ந்தேதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் பாராமல் அவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களின் போராட்டத்திற்கு, அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதேபோல, திரைப்பட நடிகர் நடிகைகளும் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தூய்மை பணியாளர்கள் இன்று 13-வது நாளாக தங்களுடைய போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அருகில் மருத்துவமனை உள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போராட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என போராட்டக்காரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடுவோரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

நாங்கள் உங்கள் கோரிக்கைக்கு எதிராகவோ அல்லது போராட்டத்திற்கு எதிராகவோ இல்லை. போராட உரிமை இருந்தாலும் சாலை அல்லது நடைபாதையை ஆக்கிரமித்து போராட அனுமதிக்க முடியாது.

அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த அனுமதி அளித்த நீதிபதிகள், யாரும் பாதிக்காத வகையில் போராட்டத்தில் ஈடுபடுமாறு தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com