விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான்: பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேச்சுக்கு தமிழிசை ஆதரவு

உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான் அனுராக் தாகூர் கூறினார். நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான்: பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேச்சுக்கு தமிழிசை ஆதரவு
Published on

இமாச்சல பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கலந்து கொண்டார்.

அப்போது அவர் மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்? என கேள்வி எழுப்பினார்.

மாணவர்கள் ஒருமித்த குரலில் நீல் ஆம்ஸ்ட்ராங் என பதிலளித்தனர்.

அதற்கு அனுராக் தாக்கூர் "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான்" என்று மாணவர்களிடம் கூறினார். பாஜக எம்.பி.யின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் முதன்முதலாக விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான் என்று பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் பேசியதற்கு திமுக எம்.பி. கனிமொழி, மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேச்சுக்கு தமிழிசை செளந்தரராஜன் ஆதரவு தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இதிகாசங்களில் நிலவுக்கு அனுமான் சென்றார் என்ற பதிவு இருக்கிறது என்று சொல்கிறார். இதில் தவறு இல்லை. எதை எடுத்தாலும் குறை சொல்வதா. விண்வெளிக்கு முதல் முதலில் சென்றது அனுமன் என அனுராக் தாக்கூர் நம்புகிறார், அதனால் சொன்னார். மெய்ஞான்மும் விஞ்ஞானமும் ஏற்கனவே இணைந்து தான் இந்திய நாட்டில் பரிமாண வளர்ச்சியில் வலர்ந்து கொண்டு இருக்கிறது.

ராமர் என்ன என்ஜீனியரா என்று கேட்டனர். அதன் பின்னர் ராமர் பாலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் மோடி அரசு வான்வெளியில் என்ன முன்னேற்றம் அடைந்து உள்ளது என்பதை பாருங்கள். அனுராக் தாகூர் பேசுவதை விட்டு முன்னேற்றத்தை பாருங்கள்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com