

ராமேஸ்வரம்:
ராமநவமியான வருகிற 6-ம் தேதி அன்று பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது. ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய ராமேசுவரத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார்.
பாம்பன் ரெயில்வே பாலம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே செய்து வருகிறது.
பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின், பிரதமர் மோடி ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.
இந்நிலையில் , பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாம்பனில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை குந்துகால் துறைமுகத்திற்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டுப்படகுகளை பாம்பனை விட்டு அப்புறப்படுத்தி தங்கச்சிமடம் பகுதியில் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.