

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [ திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை வரை நடைபெறும். 40 கோடி பேர் வரை இந்த ஆண்டு கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
லட்சக்கணக்கானோர் திரண்டுள்ள கும்பமேளாவின் ஒரு இடத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
பிரயாக்ராஜ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் தீயில் கருகியதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.