

பாட்டாளி மக்கள் கட்சியில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாட்களாக கருத்துவேறுபாடு நிலவிவருகிறது. இதனால் கட்சி நிர்வாகிகள் இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது கட்சியின் பெரும்பான்மையான ஆதரவு அன்புமணி வசம் இருப்பதால், அக்கட்சியும் அதன் சின்னமான மாம்பழமும் அவரது கட்டுப்பாட்டிலேயே உள்ளன. மேலும் தேர்தல் ஆணையமும் அன்புமணியை தலைவராக அறிவித்த நிலையில் மாம்பழ சின்னம் அவருக்குதான் என்பது உறுதியாகி உள்ளது. இதனிடையே சட்டமன்ற தேர்தலுக்காக அன்புமணி ராமதாஸ் தரப்பு தன்னிச்சையாக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
இந்நிலையில் பா.ம.க.வின் தலைவராக தன்னை தேர்தல் ஆணையம் பதிவு செய்யும் வரை தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு நாளை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.