பிற மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கு உரிய நிதியை தராமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகிறது- துரை வைகோ

கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி இதுவரை வரவில்லை.டெல்லி தலைநகரில் துப்பாக்கி சூடுகள், குண்டு வெடிப்பு, அடிக்கடி பள்ளி மாணவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அடிக்கடி நடந்து வருகிறது.
பிற மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கு உரிய நிதியை தராமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகிறது- துரை வைகோ
Published on

மதுரை:

ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துரை.வைகோ எம்.பி. மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சகோதரர் உதயநிதிக்கும், அண்ணாமலைக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என அண்ணாமலை கூறுகிறார். தமிழகத்தில் பா.ஜ.க.வை தவிர அனைத்து இயக்கங்களும், இருமொழிக் கொள்கையால் கல்வி உயர்ந்து அனைவரும் படித்துள்ளனர் என உறுதியாக இருக்கிறோம்.

வடமாநிலங்களுக்கு தமிழக பா.ஜ.க.வினர் செல்ல வேண்டும். அங்கு பா.ஜ.க. தலைவர்கள் வைக்கின்ற பிரசாரம் ஆங்கிலம் தேவையில்லை என்று. இன்றைக்கு உலக அளவில் மருத்துவத்துறை, வர்த்தகத் துறை, தொழில்துறை ஆகியவற்றில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஆங்கில புலமை தான் காரணம்.

பள்ளிக் கல்வியிலிருந்து உயர்கல்விக்கு செல்லக்கூடிய மாணவர்களின் புள்ளி விவரம் தமிழ்நாட்டில் இன்றைக்கு 50 சதவீதம். இன்றைக்கு உள்ள பள்ளி மாணவர்களுக்கு மன உளைச்சல் அதிகம். மருத்துவத்துறையில் சேர வேண்டும் என்றால் நீட் தேர்வு எழுத வேண்டும். பொறியியல் படிப்பு செல்ல வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. அப்படி இருக்கையில் எதற்காக மாணவர்கள் மூன்றாவது மொழியில் படிக்க வேண்டும்.

மூன்றாவது மொழியாக இந்தியை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கூறுகிறார்கள். ஆனால் மூன்றாவது மொழியை தேர்ந்து எடுத்தால் இந்தியை தான் தேர்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகும். உலக மொழியை கற்றுக் கொள்வதில் என்ன தவறு? இதற்கிடையே ஒன்றிய பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், தமிழகம் என்றைக்கு தேசிய கல்விக் கொள்கையை ஆதரிக்கிறதோ அப்போது தான் நிதி வழங்கப்படும் என தெள்ளத்தெளிவாக கூறி விட்டார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி இதுவரை வரவில்லை. பா.ஜ.க. அல்லாத பிற மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கு நிதியை கொடுக்காமல் இருக்கிறது. அதன் மூலமாக மக்களுக்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்துவது அல்லது ஆளுநர் மூலமாக இடையூறு அளித்து மாநில அரசுக்கு ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது.

கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் பாலியல் வன்முறை அதிகம் நடந்துள்ளது. தனிமனித ஒழுக்கம் என்பது அனைவரிடமும் இருக்க வேண்டும். தவறு செய்யும்போது தவறு செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது. உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய வழக்குகள் இந்தியாவிலேயே முதலிடம். டெல்லியை பொறுத்தவரை காவல் துறை ஒன்றிய அரசின் கையில் தான் இருக்கிறது. அங்கேயும் சட்டம், ஒழுங்கு மோசமடைந்துள்ளது.

டெல்லி தலைநகரில் துப்பாக்கி சூடுகள், குண்டு வெடிப்பு, அடிக்கடி பள்ளி மாணவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அடிக்கடி நடந்து வருகிறது. வெளிநாடுகளில் உள்ள டான்கள் டெல்லியில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை மற்றும் மாநிலங்களை விட குற்றச்சம்பங்கள் குறைவுதான்.

மக்களை பிளவுபடுத்துகின்ற சக்திகள், ஜாதி, மத அரசியல் செய்கிற இயக்கங்கள் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு இன்றைக்கு அதிகரித்துள்ளது. பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் நடக்கின்ற சம்பவங்களை முதலில் பார்க்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com