

கடந்தாண்டு செப்டம்பரில் கரூரில் நடைபெற்ற தவெக மாநாடு கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரு ஒன்றரை வயது குழந்தையும் அடங்கும். விஜய்யின் வருகை பல மணி நேரம் தாமதமானதாலும், அவரைக் காண மக்கள் திடீரென முண்டியடித்ததாலும் இந்த நெரிசல் ஏற்பட்டது என்றும், மின்வெட்டு மற்றும் போதிய தண்ணீர் வசதி இல்லாததும் உயிரிழப்புக்கு காரணங்களாகச் சொல்லப்பட்டன.
விஜய் தரப்பில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ரூ.2 லட்சம் அறிவித்தது. சிபிஐ விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் தற்போதுவரை ஆளும்கட்சியான திமுகவை மட்டுமே விஜய் குறைக்கூறி வருகிறார். இந்நிலையில் இன்றும் முதலமைச்சர் தன்மீது பழிபோட்டதாக வேலூரில் பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாதகவின் செய்தித் தொடர்பாளர் இடும்பாவனம் கார்த்திக் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
"தெலங்கானாவில் அல்லு அர்ஜுனைக் கைதுசெய்தது போல, கரூர் பேரவலத்திற்குக் காரணமான விஜய்யைக் கைதுசெய்திருக்க வேண்டும். ஆனால், வழக்குக்கூட போடாது முழுமையாகக் காப்பாற்றிவிட்டது கேடுகெட்ட திமுக.
'விஜய்யைக் கைதுசெய்து, அது திமுகவுக்கு வாக்கரசியலில் எதிர்மறையாகத் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டால் என்ன செய்வது?' எனும் இலாப, நட்டக் கணக்குப் போட்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காது விட்டது திமுக. அவ்வளவு அக்கறை மக்கள் மீது? வெட்கக்கேடு!
41 பேரின் பிணங்களின் மேல் கூட்டணி அமைக்க அதிமுகவும், பாஜகவும் முயற்சித்ததென்றால், தேர்தல் ஆதாயத்தை மனதிற்கொண்டு நடவடிக்கை எடுக்க மறுத்தது சந்தர்ப்பவாத திமுக. 41 பேரின் மரணத்தைவிட அரசியல் இலாபம்தான் முக்கியமெனக் கருதிய ஸ்டாலின் அரசின் அயோக்கியத்தனம் அது!
இன்றைக்கு, "கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டார்கள்" என்கிறார் விஜய். அப்படியென்றால், கரூர் பேரவலத்தில் விஜய்க்கு எந்தப் பொறுப்பும் இல்லையா? எந்தவிதத்திலும் அவர் காரணமில்லையா? எப்படி இப்படியெல்லாம் பேச விஜய்க்கு மனம் வருகிறது?
இப்போதுவரை கரூர் மரணங்கள் விஜய்க்கு எந்த உறுத்தலையும், குற்ற உணர்ச்சியையும், வலியையும் ஏற்படுத்தவில்லை என்பதற்கு அவரது இந்தப் பேச்சே உதாரணம்.
விஜய் என்றைக்கும் திருந்தப் போவதுமில்லை; வருந்தப் போவதுமில்லை. தன்னிடமிருக்கும் பணத்தையும், திரைக்கவர்ச்சியையும் முதலீடாகக் கொண்டு மக்களை ஆண்டுவிடத் துடிக்கும் விஜய் மிக மோசமானக் காரியக்கிறுக்கன். கடந்தக் கூட்டத்தில் இறந்தவரின் பெயரைச் சொல்லி இரங்கல்கூட தெரிவிக்காத விஜய்யின் தலைக்கனமும், ஆணவமும் மிக மிக ஆபத்தானது." எனக் குறிப்பிட்டுள்ளார்.