இளைஞரை மிரட்டிய தி.மு.க. எம்.எல்.ஏ.- நயினார் நாகேந்திரன் கண்டனம்

உதயசூரியன் அவர்களின் இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?
இளைஞரை மிரட்டிய தி.மு.க. எம்.எல்.ஏ.- நயினார் நாகேந்திரன் கண்டனம்
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது, சாலை வசதி செய்து தராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்? என இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், கேள்வி கேட்ட இளைஞர்களுக்கு திமுக எம்எல்ஏ உதயசூரியன் மிரட்டல் விடுத்ததாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக சென்ற சங்கராபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் அவர்களிடம், "சாலை வசதி செய்து தராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்?" என அப்பகுதி இளைஞர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

வாக்களித்த மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லி பழக்கமில்லாத திமுகவைச் சேர்ந்த உடன்பிறப்புகள் அந்த இளைஞர்களை அடக்க முற்படுகின்றனர்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயசூரியன் அவர்களோ ஒருபடி மேலே சென்று அந்த இளைஞர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டும் தொனியில் பேசுகிறார்.

உதயசூரியன் அவர்களின் இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இதுதான் கட்டப்பஞ்சாயத்து மாடல் அரசின் உண்மை முகம்.

திமுகவின் வெற்று விளம்பரங்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடுவார்கள் என மனக்கோட்டை கட்டி வந்த திமுக தலைவர்களை, போகும் இடங்களிலெல்லாம் மக்கள் தங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள்.

ஆட்சி அமைந்ததும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராத திமுக கட்சிக்கு, ஆள்சேர்க்கை ஒரு கேடா? என மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

அதை எதிர்பாராத திமுக தலைவர்கள் என்ன செய்வதென தெரியாமல் தங்கள் நிதானத்தை இழக்கிறார்கள். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?

கடந்த நான்கு வருடங்களாக கால் வைக்கும் இடங்களிலெல்லாம், கையில் கிடைக்கும் துறைகளிலெல்லாம் ஊழல் செய்துவிட்டு, தேர்தல் நெருங்கும் காலத்தில் ஒன்றும் தெரியாதது போல் மக்களை சென்று நலம் விசாரித்தால் இதுதான் நடக்கும். கோடிக்கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com