அங்கீகாரம் இல்லாத செயலிகளில் புகைப்படங்களை வெளியிடக்கூடாது- சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

‘பயோமெட்ரிக்’ தரவுகளையும், புகைப்படங்களையும் மூன்றாவது நபரிடம் வழங்கும் ஆபத்து உள்ளது. மோசடியினால் பாதிக்கப்பட்டால் ‘1930’ என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.
அங்கீகாரம் இல்லாத செயலிகளில் புகைப்படங்களை வெளியிடக்கூடாது- சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
Published on

சென்னை:

மாநில சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

'ஜிப்லி' செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. ஆனால் 'ஜிப்லி' கலையில் இருக்கும் ஆபத்து குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. 'ஜிப்லி' வரைகலை புகைப்படங்களை வழங்குவதற்கு இப்போது பல்வேறு செல்போன் செயலிகள் உள்ளன. இவற்றில் அங்கீகாரம் இல்லாத செயலிகளும் உள்ளன.

ஆனால், பொதுமக்கள், அறியாமையினால் அங்கீகாரம் இல்லாத செயலிகளிலும் 'ஜிப்லி' அனிமேஷன் புகைப்படங்களை பெறுவதற்காக தங்களது 'பயோமெட்ரிக்' தரவுகளையும், புகைப்படங்களையும் வழங்குகின்றனர். இதன் மூலம் அங்கீகாரமற்ற செயலிகள், ஒருவரது 'பயோமெட்ரிக்' தரவுகளையும், புகைப்படங்களையும் மூன்றாவது நபரிடம் வழங்கும் ஆபத்து உள்ளது.

அங்கீகாரம் இல்லாத செயலிகள், ஒருவரது 'பயோமெட்ரிக்', புகைப்படங்களை விளம்பர நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் விற்கும்போது, அவை 'டீப் பேக்கு'களில் பயன்படுத்தும் அபாயமும் உள்ளது. 'ஜிப்லி' அனிமேஷன் புகைப்படங்களை இலவசமாக வழங்கும் இணையதளம், செல்போன் செயலிகளுக்குள் ஒருவர் செல்லும்போது, அவரது கைப்பேசியும், கணினியும் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவதற்கும், அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் திருடும் வாய்ப்பும் இருக்கிறது.

எனவே இப்படிப்பட்ட இணையத்தளங்களையும், செயலிகளையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற மோசடியில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க, அங்கீகாரம் இல்லாத செயலிகள், இணையத்தளங்களில் இருந்து வால் பேப்பர்கள், ஆர்ட் பேக்குகள் உள்ளிட்ட எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

பரிவர்த்தனை, சுய விவரங்களை பதிவிடும் முன்பு சம்பந்தப்பட்ட இணையத்தளத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற மோசடியினால் பாதிக்கப்பட்டால் '1930' என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com