

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் கிருஷ்ணசாமி வித்யா நிகேதன் பள்ளியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் 6-ம் வகுப்பு படிக்கும் நிவாஸ் (12) என்ற மாணவன் என்றும், 12-ம் வகுப்பு படிக்கும் சாருமதி (16) என்ற மாணவி என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
விபத்தில் வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. மேலும் இந்த விபத்தில் வேன் உருக்குலைந்தது. மாணவர்களின் புத்தகப் பைகள் தண்டவாளத்தில் சிதறி கிடப்பது காண்போரின் மனதை பதைபதைக்க செய்தது.