தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த 5 ஆண்டுகளில் ஒப்பந்தம் மேற்கொண்ட 1,179 திட்டங்களில் 867 ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அரசியல் பாகுபாடு பார்க்காமல் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

சென்னையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில் ரூ.36,968 கோடி முதலீட்டில் 60,823 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 71 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ரூ.31,934 கோடி முதலீட்டில் 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 52 முடிவுற்ற திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திராவிட மாடல் அரசின் செயல்பாட்டுத் திறனை உலகிற்கு எடுத்துச் செல்லும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாடு நடத்தப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் நம்பிக்கை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் ஒப்பந்தம் மேற்கொண்ட 1,179 திட்டங்களில் 867 ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 36.52 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியை விட தமிழ கத்தின் வளர்ச்சி 3 மடங்கு அதிகமாக உள்ளது. 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

தொழில் துறையினருக்கு நம்பிக்கை அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இப்போது முன்னணியில் உள்ளது. முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்றி உள்ளோம். அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சியடைய கவனமாக செயல்பட்டு வருகிறோம்.

தொழில் துறையில் நாங்கள் செய்த சாதனைகளை அடுத்து வரக்கூடிய திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நாங்கள் தான் முறியடிப்போம். கடந்த 5 ஆண்டுகளில் 7 டைடல் பூங்காக்களை உருவாக்கி உள்ளோம்.

இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 41 சதவீதமாகும். திராவிட மாடல் என்றால் வளர்ச்சிக்கான மாடல். மக்களுக்கான மாடல். முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்றியுள்ளோம். அரசியல் பாகுபாடு பார்க்காமல் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com