1000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்கள்' - பிப்., 24-ந் தேதி திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

சென்னையில் மட்டும் 33 இடங்களில் மருந்தகங்கள் திறக்கப்படுகிறது.இங்கு குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக்கும்.
1000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்கள்'  - பிப்., 24-ந் தேதி திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.08.2024 அன்று சுதந்திர தினவிழா உரையின் போது குறைந்த விலையில் (ஜெனரிக்) மருந்து மாத்திரைகளையும் பிற மருந்துகளையும் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற் கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என்று அறிவித்தார்.

இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக 29.10.2024 அன்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்தை சேர்ந்தோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து மக்கள் மருந்தகங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதற்காக 2000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கூட்டுறவு துறைக்கு வந்திருந்தது. அதில் தகுதியான மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தது. இதில் இதுவரை 840 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்ததாக ஏற்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு கடைகளை ஒதுக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கூட்டுறவுத்துறைக்கு வந்துள்ள மற்ற மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதைத்தொடர்ந்து சென்னையில் வரும் 24-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மருந்தகங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

இதில் சென்னையில் மட்டும் கொளத்தூர் ,தி.நகர் ஆழ்வார்பேட்டை உள்பட 33 இடங்களில் மருந்தகங்கள் திறக்கப்படுகிறது. இங்கு குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக்கும்.

முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி-பார்ம், டி-பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com