முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் நீலகிரி வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

முதலமைச்சர் வருவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா தலைமை தாங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் நீலகிரி வருகை: ஏற்பாடுகள் தீவிரம்
Published on

ஊட்டி:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரிடையாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார்.

அத்துடன் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். மேலும் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அடுத்த மாதம் முதல் வாரம் அல்லது இரண்டவாது வாரத்தில் அவர் நீலகிரிக்கு வருகிறார்.

நீலகிரிக்கு வருகை தரும் அவர் அங்கு அரசு சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அத்துடன் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மக்களுக்கு நேரிடையாக சென்றடைகிறாதா என்பதையும் கள ஆய்வு செய்கிறார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் விழாவில் பங்கேற்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு தடை சட்டம் உள்ளதால், கடந்த பல ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாமல் உள்ளது. மேலும் கூடலூரில் செக்ஷன் 17 நிலப்பிரச்சினை உள்ளது.

இதுதவிர மாஸ்டர் பிளான் சட்டம், கட்டிட அனுமதி கிடைப்பதில் தாமதம் உள்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.

ஊட்டிக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதலமைச்சர் நீலகிரி வருவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, கூடுதல் கலெக்டர் கவுசிக், அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் வரும் போது மேற்கொள்ள வேண்டிய நலத்திட்ட பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு வழங்க உள்ள நலத்திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் விழா நடத்த மேற்கொள்ள வேண்டிய ஆயத்த பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் எம்.பி. ஆ.ராசா விவாதித்தார்.

இதுகுறித்து ஆ.ராசா கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் ஊட்டிக்கு வருகிறார். அப்போது பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் அரசு அதிகாரிகளுடன் நடத்தப்பட்டது என்றார். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசுத்துறை உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com