

புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொள்ளாதவரை அதற்கான நிதியை வழங்க முடியாது என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.
தமிழகத்தை பொறுத்த வரைக்கும் இரு மொழிக் கொள்கை தான் பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது. அப்படி இருக்கும் பொழுது முன் மொழி கல்வியை கட்டாயப்படுத்துவது நிச்சயமாக ஏற்புடையதல்ல.
பள்ளிகளுக்கு பெற வேண்டிய நிதியை பெற முடியாமல் இருப்பது, நமது மாணவர்களுக்கு தான் பெரிய இழப்பாகும். மாணவர்களின் கல்வியும் மிக முக்கியம். மாணவர்களுக்கும், பள்ளிக்கும் தேவையான நிதி உதவியும் மிக முக்கியம்.
எனவே மத்திய அரசும், தமிழக அரசும் கலந்தாலோசித்து இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும். "மாற்றான் போக்கு எண்ணத்தோடு" மத்திய அரசு செயல்படுவது மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.