பெரம்பலூர் அருகே கார் மோதி விபத்து- பாதயாத்திரை பக்தர்கள் 4 பேர் உயிரிழப்பு

கடந்த சில நாட்களாகவே திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் சமயபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். சிறுவாச்சூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனிப்பொழிவில் சென்று கொண்டிருந்தனர்.
பெரம்பலூர் அருகே கார் மோதி விபத்து- பாதயாத்திரை பக்தர்கள் 4 பேர் உயிரிழப்பு
Published on

பெரம்பலூர்:

சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. ஆண்டின் அனைத்து மாதங்களிலும் நடைபெறும் பல்வேறு விசேஷங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

குறிப்பாக பூச்சொரிதல், தைப்பூசம், சித்திரை திருவிழாக்களின்போது பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள் செலுத்துவது வழக்கம்.

அதேபோல் திருச்சி மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும் வந்து சமயபுரம் மாரியம்மனை தரிசித்து செல்கிறார்கள். அந்த வகையில் தற்போது தைப்பூச திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (31-ந்தேதி) தெப்பத்திருவிழாவும், நாளை (1-ந்தேதி) கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பாடும், அன்று இரவு வட திருக்காவேரி கரையில் ரெங்கநாதரிடமிருந்து சீர் பெறும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களாகவே திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் சமயபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

அதேபோல் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள தொழார் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து நேற்று காலை ஒரு குழுவாக சமயபுரம் நோக்கி பாதயாத்திரையாக புறப்பட்டனர். வழியில் ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுத்தவாறு வந்தனர். அவர்கள் இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனிப்பொழிவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சுமார் 5 மணி அளவில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் பக்தர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அந்த பகுதி முழுவதும் பெண் பக்தர்கள் மரண ஓலக்குரல் ஒலித்தது.

இதைப்பார்த்த அந்த குழுவில் இடம்பெற்றிருந்த நடந்து வந்த பக்தர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர். அதேபோல் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும் உடனடியாக நிறுத்தி விட்டு விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர். இந்த கோர விபத்தில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம், தொழார் குடிக்காட்டை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மலர்கொடி (வயது 35), திருநாவுக்கரசு மனைவி சசிகலா (47), சுப்ரமணி மனைவி விஜயலட்சுமி (40), சேலம் மாவட்டம், கெங்க வல்லியை சேர்ந்த மருத முத்து மனைவி சித்ரா (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் தொழார் குடிக்காட்டை சேர்ந்த பரமசிவம் மனைவி ஜோதிலட்சுமி (57) என்பவர் படுகாயமடைந்தார். தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காகவும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சென்னை திரிசூலம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கவுதம் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் வெளியூர்களில் இருந்து பாதயாத்திரையாக சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விபத்துகளில் சிக்கி பலியாவது தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்ற விபத்துகளை தடுக்க பாதுகாப்பு கவசங்கள் அணிய பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com